முத்துப்பேட்டை, ஏப். 13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பள்ளி ஒட்டி செல்லும் சாலையில் கழிவுநீர் வடிகால் ஒன்று செல்கிறது. இந்த வடிகால் மஜிதியா தெரு வழியாக சென்று பேட்டை சாலையில் செல்லும் கழிவுநீர் வடிகாலில் சென்று சேர்கிறது. இந்நிலையில் இந்த வடிகால் எப்போதும் திறந்த நிலையிலேயே காணப்படுகிறது. இந்த வடிகாலால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதில் எதிர்புறம் ஒரு வாகனம் வரும் போது, மற்றொரு வாகனத்திற்கு இடமிட்டு செல்லும் போது அந்த வாகனம் இந்த சேதமான கழிவுநீர் வடிகாலில் விழுந்து பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
இதனால் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த வழியாக தான் பல்வேறு பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்கிறது. இதனால் விபத்துக்களில் பள்ளி வாகனங்கள் சிக்கி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த பகுதியில் உள்ள சேதமான இந்த கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்களும், பள்ளி வாசல் நிர்வாகமும் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறனர். ஆனாலும், அதிகாரிகள் அலட்சியத்தால் இந்த அவலம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி தற்போதைய பேரூராட்சி நிர்வாகம், இதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மூடி அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post போக்குவரத்துக்கு இடையூறு கழிவுநீர் வடிகாலில் மூடி அமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.